கழிவறையிலேயே உணவு, தூக்கம் : டெல்லி சிறுமியின் சோகக் கதை!!

504

girl

வேலைக்கார சிறுமியை வீட்டுக்குள் அடைத்து வைத்து சூடு போட்டும் கத்தியால் தாக்கியும் சித்ரவதை செய்து கொடுமைப்படுத்திய எஜமானி ஒருவரை டெல்லி பொலிசார் கைது செய்தனர்.

தெற்கு டெல்லியின் வசந்த்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டின் பல்கனியில் இருந்து ஒரு சிறுமி உடல் முழுக்க தீ மற்றும் வெட்டுக்காயங்களுடன் தன்னை காப்பாற்றும்படி கதறி அழுதபடி கூச்சலிட்டாள்.

சிறுமியின் கூக்குரலை கேட்ட அக்கம் பக்கத்தினர் இதுதொடர்பாக மனித உரிமை ஆர்வலர்களுக்கும் பொலிசாருக்கும் தகவல் அளித்தனர்.



அவர்கள் விரைந்து வந்து உடல் முழுக்க காயங்களுடன் மிக மோசமான நிலையில் இருந்த அந்த பரிதாபத்திற்குரிய சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அந்த சிறுமி பொலிசாருக்கு அளித்த வாக்குமூலத்தில் என்னை வெளியே போக விடாமல் அடைத்து வைத்திருந்த முதலாளி அம்மா சற்று நேரம் கூட ஓய்வு தராமல் தொடர்ந்து என்னிடம் வேலை வாங்கி வந்தார்.

நான் செய்த வேலையில் எப்போதும் குறை கண்டுபிடிக்கும் அவர் சூடு போட்டும், பெல்ட், பிரம்பு போன்றவற்றால் அடித்தும் சித்ரவதை செய்வார். சில வேளைகளில் வெட்டுக்கத்தியால் தாக்கியும் கொடுமை படுத்துவதுண்டு என்று கூறினார்.

அவர் கூறுவது அனைத்தும் உண்மை என்பதை அந்த சிறுமியின் தலை மற்றும் உடலில் உள்ள வெட்டு காயங்கள் மற்றும் தீக்காயங்கள் உறுதிப்படுத்துகின்றன. அந்த சிறுமியை இந்த நிலைக்கு ஆளாக்கிய வந்தனா திர் என்ற 50 வயது பெண்ணை பொலிசார் கைது செய்தனர்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் அந்த சிறுமியை சந்தித்த டெல்லி அரசின் குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை அமைச்சர் கிரண் வாலியா சிறுமிக்கு நேர்ந்துள்ள இந்த கொடுமை கொடூரமானது காட்டுமிராண்டித்தனமானது என்று கூறியுள்ளார்.

தற்போது வைத்தியசாலையில் உடல்நலம் தேறிவரும் அந்த பெண் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

என்னை கத்தி, நாய் சங்கிலி, தோசைக்கல் போன்வற்றால் அடித்து கொடுமைப்படுத்திய எஜமானி தனது சிறுநீரை குடிக்கச் சொல்லியும் என்னை கொடுமைப்படுத்தினார். கழிவறையிலேயே சாப்பிட்டு அங்கேயே தூங்கியும் நான் அவதிப்பட்டேன் என்று அவர் கூறினார்.