இளம்பெண்ணை மாட்டு சாணம் சாப்பிட வைத்த சம்பவம் : 5 பேர் தலைமறைவு!!

997

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம் பெண்ணிற்கு பேய் பிடித்திருப்பதாக கூறி மாட்டு சாணத்தை உண்ண வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் லத்தூர் மாவட்டம் தங்கர்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது நிரம்பிய இளம்பெண்.

இவருக்கு பேய் பிடித்திருக்கிறது என்றும், இதன் காரணமாக வீட்டில் இருக்கும் ஆண்களை தினமும் அடித்து, மிரட்டி வருவதாகவும் இவரது உறவினர்கள் கூறி வந்தனர்.

இதன் காரணமாக இவருக்கு பிடித்துள்ள பேயை விரட்ட கர்நாடகா மாநிலம் பிதார் மாவட்டத்தில் உள்ள பேய் விரட்டும் ஒருவரை சந்தித்துள்ளனர்.

அப்போது அவர், இந்தப் பெண்ணிற்கு பிடித்துள்ள பேயை வித்தியாசமாக விரட்டலாம் என்று கூறி அந்த இளம் பெண்ணை கட்டி வைத்து சாட்டையால் அடித்துள்ளனர்.

மேலும் அந்த பெண்ணிற்கு எருமை மாட்டு சாணத்தை கொடுத்து, கட்டாயப்படுத்தி உண்ண வைத்துள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த கிராம வாசிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் பொலிசார் அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக பொலிசார் கூறுகையில், பெண்ணிற்கு பேய் பிடித்திருப்பதாக கூறி அவருக்கு தொடர்ந்து சித்ரவதை செய்யப்படுவதாக எங்களுக்கு புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்தியதில், இதில் கிட்டத்தட்ட 5 பேர் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர்கள் தலைமறைவாகி விட்டனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

இளம்பெண் ஒருவர் இப்படி கொடூரமாகவும் காட்டு மிராண்டித்தனமாகவும் நடத்தப்பட்டதற்கு சமூக ஆர்வலர்களும் பெண்ணியவாதிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.