தனது மனைவியை பகிடி செய்த நபரை தலையில் கூரிய ஆயுதத்தினால் குத்திக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்ற நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
பங்கதெனிய குமாரகட்டுவ நிவஹல்புர எனும் பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவார்.
கொலை செய்யப்பட்டவரும் அவரைக் கொலை செய்தவரும் ஒரே பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். கொலை செய்யப்பட்ட நபர் அவரைக் கொலை செய்தவரின் மனைவியை அநாகரிகமான முறையில் பகிடி செய்ததால் அவரை சந்தேக நபர் எச்சரித்திருந்ததாக கூறப் படுகிறது.
அத்துடன் நிறுத்திக் கொள்ளாத சந்தேக நபர், அதிகாலை 1.30 மணியளவில் கொலை செய்யப்பட்டவரின் வீட்டுக்குச் சென்று நித்திரையிலிருந்த அவரை எழுப்பி மீண்டும் தனது மனைவியை பகிடி செய்ததற்காக அவரை எச்சரித்துள்ளதுடன் தனது கையிலிருந்த அரிவாளால் அவரின் தலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் மன்னா கத்தி தாக்குதலில் பலத்த காயங்களுக்குள்ளான நபர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாக்குதலையடுத்து சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்த நிலையில் இன்று தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட மன்னா கத்தியுடன் அவரைக் கைது செய்ய முடிந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம் பொலிஸ் நிலைய தலைமையக பொலிஸ் பரிசோதகர் வசந்த ஹேரத்தின் ஆலோசனையின் பேரில் குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் புஷ்பகுமாரவின் தலைமையிலான குழுவினர் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.