காதல் திருமணம் செய்த ஜோடிகள் : 30 நிமிடங்களில் உறவினர்கள் செய்த செயல்!!

511

தமிழகத்தில் காதல் திருமணம் செய்து 30 நிமிடங்களே ஆன நிலையில், அவர்களை உறவினர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்(22). இவர் பி.பி.ஏ. முடித்து விட்டு, அங்குள்ள மினி பஸ் ஒன்றில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இவர் வடக்கூர் பகுதியைச் சேர்ந்த அபிநயா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதன் பின் இவர்கள் இருவரும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அபிநயா நேற்று வெளியில் சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு பாபநாசத்திற்கு சென்றுள்ளார். அங்கு ராஜேசும் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதனால் அருகில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்த விவரம் அபிநயாவின் குடும்பத்திற்க்கு தெரியவர உடனடியாக அவர்கள் தங்கள் உறவினர்கள் சிலரை அங்கு அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொண்ட இருவரையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

இதில் சிலர் அவர்களை உருட்டுகட்டை வைத்தும் தாக்கியுள்ளனர். அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்று தஞ்சம் அடைந்தனர்.

இருவரையும் சமாதானப்படுத்தி விசாரணை செய்த பொலிசாரிடம், காதல் ஜோடிகள் தங்களுக்கு 30 நிமிடங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்ததையும் தாங்கள் உருட்டுக்கட்டை மற்றும் கற்களால் தாக்கப்பட்டதையும் கூறியுள்ளனர்,

மேலும் அபிநயாவின் உறவினர்கள் ஜாதிப்பெயரை கூறி திட்டியதாக ராஜேஷ் புகார் அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.