கடந்த ஆறு மாதங்களாக இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் கோஹ்லிக்கும், பயிற்சியாளர் கும்ப்ளேவுக்கும் இடையே முறையான பேச்சுவார்த்தைக் கூட இல்லை என தகவல் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி மற்றும் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே இடையிலான கருத்து வேறுபாட்டின் உச்சமாக, அனில் கும்ப்ளே தனது தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நேற்றைய முன்தினம் விலகியுள்ளார்.
இதுபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் சூழலில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அணித்தலைவர் கோஹ்லியும், கும்ப்ளேவும் கடந்த ஆறு மாதங்களாக முறையாக பேசிக்கொள்வதுக்கூட இல்லை என்ற தகவல் கசிந்துள்ளது.
கடந்த டிசம்பரில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின்னர் இவர்கள் இருவருக்குள்ளேயும் கருத்து பரிமாற்றம்கூட முறையாக இல்லாமல் போய்விட்டது என தகவல்கள் கூறப்படுகின்றன.
மேலும், தலைமை ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள சச்சின் டெண்டுல்கர், கங்குலி, லக்ஷ்மண் ஆகியோர் கும்ப்ளேவின் ராஜினாமாவுக்கு இன்னும் முழுமனதாக தங்கள் ஒப்புதலை அளிக்கவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.
இதனிடையே பி.சி.சி.ஐ நிர்வாகிகளுடன் நேரில் பேசிய கும்ப்ளே, ‘விராட்டிடம் தமக்கு எந்த பிரச்னையும் இல்லை’, என கூறியதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோஹ்லி, கும்ப்ளே இருவரையும் ஒரேநேரத்தில் அழைத்துபேசியபோதும் கூட சாதகமான எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பதே கடைசிகட்ட தகவலாக உள்ளன.






