வவுனியா ஏ9 வீதியில் இடம் பெற்ற வீதி விபத்தில் ஆறு வயது சிறுமி தலை சிதறி பலியாகியுள்ளார். இன்று மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் கணேசன் நிறோசினி என்ற ஆறு வயது சிறுமியே உயிரிழந்துள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது..
புளியங்குளம் பரிசங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி ஏ9 வீதியோரமாய் தனது வீடு நோக்கி சகோதரனுடன் நடந்து சென்று கொண்டிருந்த போது வவுனியாவிலிருந்து வந்த டிப்பர் வாகனம் சிறுமியை மோதியது.
வாகனத்தில் மோதுண்ட சிறுமி தூக்கி எறியப்பட்டு துடிதுடித்து தலை சிதறி பலியாகியுள்ளார். சம்பவ இடத்திற்கு உடனடியாக வருகை தந்த பொலிசார் குறித்த வாகனச்சாரதியை பாதுகாப்பாக வேறு இடத்திற்கு அனுப்பிவைக்க முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதை அறிந்து அங்கு கூடிய பொது மக்கள் வாகனத்தை எடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வாகனத்தை எடுக்கவிடாமல் வீதியின் குறுக்கே நின்று ஆர்ப்பாட்டம் செய்தபோதும் பொலிசார் வாகனத்தை அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளனர்.
உயிரிழந்த சிறுமியின் சடலம் வவுனியா வைத்திய சாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.








