பல்கேரியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 32 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
பல்கேரிய விசேட விமானம் ஒன்றின் மூலம் இன்று குறித்த இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இத்தாலிக்கு அழைத்துச் செல்வதாக கூறி சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் இவர்களை துருக்கியில் நிர்க்கதியாக்கிச் சென்றுள்ளனர்.
இந்த இலங்கையர்கள் இத்தாலி செல்லும் எண்ணத்தில் துருக்கியிலிருந்து பல்கேரியாவிற்கு தப்பிச் சென்றுள்ளனர்.
இலங்கையர்கள் எப்போது இவ்வாறு பல்கேரியாவிற்குள் பிரவேசித்தனர் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த இலங்கையர்களின் பாதுகாப்பிற்காக 38 குடிவரவு, குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளும் விசேட விமானத்தில் பயணித்திருந்தனர் என தெரியவந்துள்ளது.
நாடு கடத்தப்பட்டவர்களிடம் அரச புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
அதன் பின்னர் நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்படுகின்றது.






