சிகையலங்காரம் செய்வதற்காக சிகையலங்கார நிலையமொன்றுக்கு 18 வயதான காதலியை அழைத்துச் சென்ற இளைஞர் ஒருவர் தனது காதலியை அவ்விடத்தில் விட்டுவிட்டு சிகையலங்காரத்துக்கான பணத்தை வங்கியில் எடுத்துவருவதாக கூறி தப்பிச்சென்ற சம்பவமொன்று அநுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நபர் தனது காதலிக்கு சிகையலங்காரம் செய்வதற்காக அநுராதபுரம் நகரிலுள்ள சிகையலங்கார நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ள நிலையில் அவருக்கு சிகையலங்காரம் செய்து முடிவடைவதற்குள் அதற்கான கட்டணமான 6000 ரூபாவை எடுத்து வருவதாக கூறி 22 வயதான காதலன் தனது காதலியை விட்டுச் சென்றுள்ளார்.
பதினெட்டு வயதான யுவதி சிகையலங்காரத்தை முடித்துக் கொண்டு தனது காதலன் வருகைக்காக சுமார் 4 மணித்தியாலங்கள் காத்திருந்த போதிலும் அவர் வராத காரணத்தினால் மேற்படி சிகையலங்கார உரிமையாளர், யுவதியை நேற்றுமுன்தினம் மாலை அநுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
கம்பஹா வெலிவேரிய பிரதேசத்தை சேர்ந்த 18 வயதான யுவதியே இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அதன்பின்னர் பொலிஸார் இதுதொடர்பில் அநுராதபுரம் பொலிஸ் மூலம் யுவதியின் பெற்றோருக்கு அறிவித்திருந்தனர்.
தப்பிச் சென்ற தனது காதலன் குருணாகல் பிரதேசத்தை சேர்ந்தவரெனவும் கடந்த 4 மாதங்களாக தாம் காதலித்து வருவதாகவும் யுவதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் காதலனின் சகோதரி உயிரிழந்திருந்தமையினால் அவரது மரண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இந்த யுவதி குருணாகலிலுள்ள காதலன் வீட்டுக்கு சென்றுள்ளார். இறுதிச் சடங்குகள் நிறைவடைந்ததன் பின்னர் இவ்விருவரும் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக மூன்று நாட்களுக்கு முன்னர் அநுராதபுரம் நோக்கி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இளைஞனின் பெற்றோருக்கு இவர்களது காதல் விவகார தெரிந்திருந்ததுடன் திருமணத்துக்கு சம்மதமும் தெரிவித்துள்ளனர். எனினும் யுவதியின் வீட்டாருக்கு இது தொடர்பில் எவ்வித தகவலும் தெரிந்திருக்கவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.