வவுனியாவில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்து பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (25.07.2017) காலை 10 மணியளவில் கண்டனப்பேரணி இடம்பெற்றது.
வவுனியா உள்ளுர் விளைபொருள் விற்பனை சந்தையின் முன்பாகவிருந்து ஆரம்பமான கண்டனப் பேரணியானது பசார் வீதி வழியாக வவுனியா மணிக்கூட்டுகோபுர சந்தியை வந்தடைந்து அங்கிருந்து A9 வீதிவழியாக வவுனியா மாவட்ட செயலகத்தை வந்தடைந்தது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் ஒன்றுகூடிய பொது அமைப்புக்கள் யாழ்ப்பாணம் நல்லூரில் மேல் நீதிமன்ற நீதிபதியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து மரணமான பொலிஸ் சார்ஜன் சரத் கேமச்சந்திரவுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்கள்.
இப்பேரணியில் வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கம், வரையறுக்கப்பட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம், உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம், வவுனியா வர்த்தகசங்கம், சிகை அலங்கரிப்பாளர் சங்கம் மற்றும் பொது அமைப்புக்கள் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.







































