இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து 10 பேர் பரிதாபமாக பலி!!

625

 
இந்தோனேசியாவின் போர்னியோ தீவில் பயணிகள் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போர்னியோ தீவில் ஏற்பட்ட இந்த படகு விபத்தில் ஏராளமானோர் மாயமாகியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.

விபத்துக்குள்ளான படகில் எத்தனைபேர் பயணம் செய்துள்ளனர் என்பது இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளியாகாததால் மாயமானவர்களின் பட்டியல் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் குறித்த படகில் 40 பேர் வரை பயணம் செய்திருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் காணவில்லை என உறவினர்கள் தரும் புகாரின் அடிப்படையில் முழுமையான எண்ணிக்கையை அதிகாரிகள் தரப்பில் வெளிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே இதுபோன்று படகு விபத்து ஏற்படுவது வாடிக்கையாகவே நடந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது அதிக எண்ணிக்கையிலான பயணிகளை படகில் ஏற்றிச் செல்வதே என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகின்றது.

கடந்த நவம்பர் மாதம் சிங்கப்பூரின் தென் பகுதியில் அமைந்துள்ள பாடாம் தீவில் பாறை ஒன்றில் மோதி விபத்துக்குள்ளான படகில் பயணம் மேற்கொண்ட 101 பேரில் பாதிக்கும் மேலான மக்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதேபோன்று மலேசியாவில் இருந்து பாடாம் தீவுக்கு பயணமான படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். இதில் 34 பேர் மீட்கப்பட்டனர்.