உச்சமடையும் பனிப்போர் : வடகொரிய வான்பரப்பில் அமெரிக்க போர் விமானங்கள்!!

612

வடகொரியாவை எச்சரிக்கும் நோக்கில் அந்நாட்டு வான்பரப்பில் அமெரிக்க போர் விமானங்கள் பறந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில், வட கொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை கடந்த வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நடத்தியது.

அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் உள்ள இராணுவ தளத்தை குறி வைத்து எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக சர்வதேச போர்க்கலை வல்லுனர்கள் கருதுகின்றனர்.

இதனையடுத்து வடகொரியாவை எச்சரிக்கும் வகையில் அமெரிக்க விமானப்படையை சேர்ந்த இரு B-1B ரக போர் விமானங்கள் அந்நாட்டு வான் பரப்பில் பறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் வடகொரியாவிற்கு இடையிலான பனிப்போர் வலுபெற்றுள்ளதாகவும், இதனையடுத்து கொரிய தீபகற்பத்தில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.