இலங்கையில் காணப்படும் மூலாதாரங்களில் இருந்து மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன்மூலம் 2030ஆம் ஆண்டளவில் உள்நாட்டு மூலாதாரங்களில் இருந்து மின்வலுவை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
சூரிய மின்வலு புரட்சி என்ற பெயரிலான திட்டத்தின் கீழ், 2025ஆம் ஆண்டுக்குள் 10 இலட்சம் வீடுகளுக்கு சூரிய கலங்களை பொருத்தவுள்ளதாக மூலோபாய தொழில்வாண்மை முகாமைத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் பிரகாரம் இரண்டு இலட்சம் வீடுகளுக்கான செலவினங்களை அரசாங்கம் பொறுப்பேற்கும். ஏனைய வீடுகளுக்கான கடன் தொகைக்குரிய வட்டியில் 50 சதவீதத்தை அரசாங்கம் செலுத்தவுள்ளது.
இந்தத் தகவலை மூலோபாய தொழில்வாண்மை முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் அசோக்க அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
சமகாலத்தில் இலங்கை மின்வலு விநியோகம் நெருக்கடி நிலையை எதிர்கொள்கிறது. மின்வலுத் தேவை வருடந்தோறும் 5 சதவீதத்தால் அதிகரிக்கிறது. இதற்கு பரிகாரமாக சூரிய சக்தியின் மூலம் மின்சார்த்தை உற்பத்தி செய்து வீடுகளுக்கு விநியோகிக்கப் போவதாக அபேகுணவர்தன குறிப்பிட்டார்.
செயற்றிறன் மிக்க மின் உபகரணங்களை பயன்படுத்துவதில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். விரைவில் CFL மற்றும் LED மின் குமிழ்களுக்கான தரப்படுத்தல் முறை அறிமுகமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.






