துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான யானையை காப்பாற்ற முயற்சித்து வரும் வனத்துறையினர்!!

491

 
அம்பாந்தோட்டை பிரதேசத்திலுள்ள காடு ஒன்றில் தலை மற்றும் வாய்ப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவதியுற்ற காட்டு யானை ஒன்றை காப்பாற்றுவதற்கான முயற்சியில் வன இலாகா அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான குறித்த யானை சில நாட்களாக துறைமுகத்திற்கு அண்மையிலுள்ள காட்டுப் பகுதியில் சிரமப்பட்டு வருவதை துறைமுக பணியாளர்கள் கண்காணித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து வன உயிரின இலாகா அதிகாரிகளுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர் உட்பட வன உயிரின இலாகாவினர் குறித்த இடத்திற்கு விரைந்து யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தற்போது யானை எழுந்து நடமாட முடியாத ஆபத்தான நிலையில் இருப்பதன் காரணத்தினால் இதனை யானைகள் சரணாலயத்திற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

3 வயது மதிக்கத்தக்க இந்த யானையின் வாயிலும், தலையிலும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்து, அதற்கு உகந்த சிகிச்சைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக வன விலங்கு மருத்துவ அதிகாரி வைத்தியர் மாலக்க அபேயவர்தன தெரிவித்துள்ளார்.

வாயில் ஏற்பட்டுள்ள துப்பாக்கிச் சூட்டுக் காயம் காரணமாக யானை உணவு உண்ண முடியாமல் சிரமப்படுவதாகவும், இந்த யானைக்கு ஏற்கனவே தும்பிக்கையில் அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.