பிரித்தானியாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர், இலங்கைக்கு விடுமுறைக்காக சென்ற போது முதலை அவரை நீருக்கடியில் இழுத்துச் சென்றதால், அவரது உடலை பொலிசார் தேடிவருகின்றனர்.
பிரித்தானியாவின் Surrey பகுதியைச் சேர்ந்தவர் Paul McClean(25), ஒஸ்போர்ட் யூனிவர்சிட்டியில் பட்டப்படிப்பை முடித்த இவர், FINANCIAL Times பத்திரிக்கை நிறுவனத்தில் செய்தியாளராக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் விடுமுறை கழிப்பதற்காக தனது நண்பர்களுடன் இலங்கை சென்றுள்ளார். இதையடுத்து நேற்று இலங்கையின் Arugam Bay கடற்கரைக்கு அருகே உள்ள Crocodile Rock பகுதியின் வழியே சென்ற போது, கழிப்பறைக்கு சென்று விட்டு வருவதாக தனது நண்பர்களிடம் கூறியுள்ளார்.
அதன் பின் அருகே இருந்த நதி ஒன்றில் தனது கையை கழுவுவதற்காக வைத்த போது, நதியின் உள்ளே இருந்த முதலை அவரை தண்ணீரின் உள்ளே இழுத்துச் சென்றுவிட்டதாகவும், உயிருக்கு போராடிய அவர் உதவி கேட்டு தனது கையை உயர்த்தி காட்டியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இதை அறிந்த இலங்கை பொலிசார் மற்றும் இராணுவத்தினர் அவரது உடலை தேடிவருகின்றனர்.








