கொட்டாவை ருக்மல்கம பிரதேசத்தில் பெண்ணொருவர் அவரது வீட்டில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தலைக்கவசம் அணிந்து வந்த இரண்டு பேர் நேற்று முன்தினம் இரவு (30.11) குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டினுள் புகுந்த சந்தேகநபர்கள் இருவரும் இரண்டு துப்பாக்கிகளைக் கொண்டு உயிரிழந்த பெண்ணை தேடி வந்துள்ளனர். அந்த சந்தர்ப்பத்தில் கொலையுண்ட பெண் தனது தாயை நோக்கி ஓடியுள்ளார்.
அந்த தருணத்தில் ஒரு துப்பாக்கிதாரி பெண்ணை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ள போது அவர் கீழே விழுந்துள்ளார்.
அதன்போது, மற்றைய துப்பாக்கிதாரி பெண்ணின் மீது 14 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த பெண் ருக்மலே மகளிர் விடுதி பாதையில் வசித்த மஞ்சுளா சந்துனி (42) என்ற இரண்டு பெண்களின் தாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் அத்துருகிரிய பிரதேசத்தில் சிகையலங்கார நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
கடந்த ஜனவரி 17 ஆம் திகதி குறித்த பெண்ணின் சிகையலங்கார நிலையத்தில் அத்துருகிரிய பண்டா எனப்படும் டனில் பண்டார என்பவர் கொலை செய்யப்பட்டமைக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம்சுமத்தப்பட்ட நிலையில் மூன்று மாதங்கள் விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பின்னர் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
உயிரிழந்த பெண் விளக்கமறியலில் இருந்து விடுதலையாகி வந்தபின்னர் பல இடங்களில் தலைமறைவாகியிருந்த நிலையில் அண்மையில் பிள்ளைகளும் கணவரும் தங்கியிருந்த வீட்டுக் சென்றிருந்த போது இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.