காலி பிரதேசத்தை சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரின் 16 வயதான மகள், ஹோமாகமை பிரதேசத்தில் சிறிய வீடொன்றில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் எட்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக கூறப்படும் சிறுமியே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றால், பெற்றோரை கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தி சிறுமியை தடுத்து வைத்திருந்தாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நபர் சிறுமியின் தந்தையிடம் சாரதியாக பணியாற்றியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாரதியாக பணிப்புரிந்த சந்தேகநபர் சரியாக பணிப்புரியவில்லை என்ற காரணத்தில் வேலையை விட்டு நீக்கப்பட்டிருந்தாகவும் இதற்கு பழிவாங்கும் நோக்கில் வர்த்தகரின் மகளை சந்தேகநபர் கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.