குடும்பத் தலைவரைக் கொலை செய்தவருக்கு மரண தண்டனை!!

705

கிளிநொச்சியில் ஒருவரை கொலை செய்த குற்றத்துக்காக 2 பிள்ளைகளின் தந்தையான குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதியளவில் கிளிநொச்சியில் வேலுப்பிள்ளை சிவரூபன் என்பவர் போத்தால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
அவரது சடலம் பாறையொன்றுடன் கட்டப்பட்டு கிணற்றில் தள்ளப்பட்டிருந்தது.

இந்தக் கொலையைச் செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கிளிநொச்சியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் கரிகரன், தங்கராஜா ராஜேந்திரன் அல்லது ராசா ஆகிய இருவரும் மாங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவருக்கும் எதிராக கிளிநொச்சி நீதிவான் மன்றில் சுருக்க முறையற்ற விசாரணைகள் இடம்பெற்றன.
அதன் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

வேலுப்பிள்ளை சிவரூபனை கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் எதிரிகள் இருவருக்கு எதிராகவும் தண்டனைச் சட்டக் கோவை 296 ஆம் பிரிவின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் 2011 ஆம் ஆண்டு பெப்ரெவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், நேற்று (07.12) யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்றன.

இரண்டாம் பிரதிவாதி மீதான குற்றச்சாட்டை வழக்குத் தொடுனரால் நீருபிக்க முடியவில்லை. அதனால் இரண்டாம் பிரதிவாதியை மேல் நீதிமன்றம் விடுவித்தது.

முதலாம் பிரதிவாதி மீதான குற்றம் கண்கண்ட சாட்சிகளின் அடிப்படையில் நிரூபிக்கப்படாவிடினும் சந்தர்ப்ப சூழல் சாட்சியங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதனால் கொலை செய்யும் பொது நோக்கோடு வேலுப்பிள்ளை சசிரூபனை கொலை செய்தார் என இனங்கண்டு முதலாம் பிரதிவாதியை குற்றவாளியாக நீதிமன்று அறிவிக்கிறது” என்று மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

கொலைக் குற்றத்துக்காக ஜனாதிபதியால் தீர்மானிக்கப்படும் திகதியில் நிர்ணயிக்கப்படும் இடத்தில் குற்றவாளியின் உயிர் பிரியும்வரை தூக்கிலிடுமாறு இந்த மன்று பரிந்துரைக்கிறது” என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.