சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதியொருவருக்கும் அவரது காதலிக்கும் திருமணம் நடைபெற்று 30 நிமிடங்களில் பிரிந்து சென்ற சம்பவமொன்று கொழும்பில் பதிவாகியுள்ளது.
கொழும்பு – மெகசின் சிறைச்சாலையில் முப்பத்தேழரை வருடம் சிறைத்தண்டனை அனுபவத்து வரும் செனரத் பந்துல லியனாராச்சி என்பவரும், வத்தளையில் வசிக்கும் சவீட்டி ஷாலின் சமிளா என்பவரும் நீண்ட காலங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் அரசியல் கைதிகளின் உரிமைக்கான அமைப்பிடம் தமக்கு திருமணம் செய்து வைக்குமாறு கோரியுள்ள நிலையில், இருவருக்கும் நேற்று சிறைச்சாலையில் வைத்து திருமணம் நடத்தப்பட்டுள்ளது.
இவர்களது திருமணம் நேற்று 10.30 மணியளவில் நடைபெற்றுள்ள நிலையில், இதனைத் தொடர்ந்து மணமகள் இல்லத்தரசியாக வீட்டிற்கும், மணமகன் தண்டனைக் கைதியாக சிறைச்சாலைக்கும் சென்றுள்ளனர்.
திருமணம் முடிந்து 30 நிமிடங்களிலேயே தம்பதியினர் கண்ணீர் வார்த்தபடி பிரிந்து சென்றுள்ளனர். இதன்போது மணமகள் தரப்பில் அருட்தந்தை சக்திவேலும், மணமகன் தரப்பில் பௌத்த மதகுருவொருவரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.