வேலை பெற்றுத் தருவதாக கூறி கரூரிலுள்ள இலங்கை அகதிச் சிறுமியொருவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுமியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குறித்த ஏழு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மூன்று தலைமுறைகளாக கரூரில் அகதி வாழ்க்கை வாழ்ந்து வரும் குடும்பத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி வறுமையின் காரணமாக பாடசாலை கல்வியை தொடர முடியாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் குறித்த சிறுமியின் தாய்க்கு அறிமுகமான சரண்யா எனும் 27 வயதான பெண்ணொருவர் வீட்டில் இருக்கும் சிறுமிக்கு வேலை பெற்றுத் தருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் திடீரென்று அவர் சிறுமியை திருப்பூருக்கு அழைத்துச் சென்று அங்கு மேலும் சிலருடன் இணைந்து அவரை பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பி வந்த சிறுமியின் செயற்பாட்டில் ஏற்பட்டிருந்த மாற்றம் தொடர்பில் சந்தேகமடைந்த சிறுமியின் தாயார் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து அனைத்து விடயங்களும் தெரியவந்துள்ள நிலையில் நான்கு பெண்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்த ஏழு பேர் மீதும் ஆட்கடத்தல், சிறுவர் துஷ்பிரயோகம், சட்டவிரோதமாகத் தடுத்து வைத்தல் ஆகிய பிரிவுகளில் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.