யாழ். பல்கலைகழகத்தில் அமைய அடிப்படையில் சேவையாற்றி வந்தநிலையில் இடைநிறுத்தப்பட்ட ஊழியர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ். பல்கலைகழகத்திற்கு முன்னால் இன்று காலை 8 மணிமுதல் இடைநிறுத்தப்பட்ட 17 ஊழியர்களும் தமக்கு நியாயம் கிடைக்கும் வரை சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
1. திடீர் வேலைநிறுத்தத்தினால் நிர்கதியான எமக்கு உரிய தீர்வினை வழங்குங்கள்.
2. எமது வேலையினை தொடர்ந்து மேற்கொள்ளுவதற்கு தகுந்த நடவடிக்கையினை மேற்கொள்ளுங்கள்.
3. இதுவரை காலமும் பல்கலைகழகத்திற்கு விசுவாசமாக உழைத்த எங்களை இடைநிறுத்தி வீதிக்கு அனுப்பியதுதான் தங்கள் நிர்வாகத்தினால் எமக்கு வழங்கப்பட்ட வெகுமதியா?
4. பல்கலை கழக நிர்வாகமே எமது நிலைமைக்கு உரிய தீர்வினை வழங்குங்கள்.
5. தொழிலாளி வெற்றிடத்திற்கு புதிய வெற்றிடத்திற்கு ஆட்சேர்ப்பின் போது கடந்த 10 மாதகாலமாக இங்கு பணிபுரிந்த நாங்கள் புறக்கணிப்பது நியாயமானதா ?
6. புதிய ஊழியர்கள் ஆட்சேர்ப்பின்போது எமது பெயர் பட்டியலை சம்பந்தபட்ட அமைச்சிடம் வழங்காமல் நிர்வாகம் எம்மை புறக்கணித்தமை நியாயமா ?
போன்ற ஆறு அம்ச கோரிக்கையை முன் வைத்த அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கருத்து தெரிவிக்கையில்..
கடந்த 10.07.2013. அன்று எந்தவித முன்னறிவித்தலும் இல்லாது தீடிரென தனிப்பட்ட ரீதியில் புதிய ஆட்கள் வரவழைக்கப்பட்டு நேர்முக தேர்வு நடாத்தப்பட்டது. அதன் பின்னர் வடமாகாண சபை தேர்தல் அறிவிக்கபட்ட நிலையில் அவர்களுக்கான நியமனங்கள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது அவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 7ம் திகதி முதல் புதிய கல்விசார ஊழியர்கள் இங்கு வேலைக்கு அமர்த்தப்பட்ட நிலையில் அதுவரை காலமும் பணியாற்றி வந்த நாங்கள் நியாயமற்ற முறையில் வேலையில் இருந்து நீக்கப்பட்டோம்.
யாழ். பல்கலைகழக நிர்வாகத்தினால் மூடி மறைக்கப்பட்ட எமது நிலைமையினை வெளிக்கொணர்ந்து தெரியப்படுத்தி எமக்குரிய நியாயமான தீர்வினை பெற்று கொள்வதற்காகவே அகிம்சாவழியில் இந்த சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கியுள்ளோம் என அவர்கள் தெரிவித்தனர்.







