மட்டக்களப்பு – புதூர் பகுதியைச் சேர்ந்த இரு சிறுவர்கள் காணாமல்போயுள்ள நிலையில் அவர்களை கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சிறுவர்கள் இருவரையும் அவரது தந்தை அழைத்துச் சென்றுள்ளதாக கடந்த மாதம் 22ஆம் திகதி மட்டக்களப்பு சிறுவர், பெண்கள் பொலிஸ் பிரிவிற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
எனினும் இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் தம்மால் சிறுவர்களை கண்டுபிடிக்க முடியாதுள்ளதாக மட்டக்களப்பு சிறுவர், பெண்கள் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி சுசீலா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சிறுவர்களை அவர்களது தந்தை யாழ்ப்பாணம், கண்டி உள்ளிட்ட பல இடங்களுக்கு மாற்றி மாற்றி கொண்டு செல்வதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இந்த சிறுவர்களை மீட்பதற்கு பொதுமக்கள் உதவ வேண்டும் எனவும், பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.