நடு இரவில் வீட்டின் கதவை தட்டி இளைஞர்கள் தொந்தரவு செய்வார்கள்: திருநங்கை கிரேஸ் பானு!!

440

பெண்களுக்கு நடக்கப்படும் பாலியல் சீண்டல்களை விட, எங்களுக்குத் தான் அவர்களை விட அதிகமாக நடக்கிறது என்று கவலையுடன் கூறுகிறார் திருநங்கை கிரேஸ் பானு.

கிராமத்தில் பிறந்த நான், அங்கிருக்கும் பள்ளி ஒன்றில் தான் படித்தேன், அதன் பின் குடும்ப சூழ்நிலை காரணமாகவும், சமூக சூழ்நிலையாலும் வீட்டைவிட்டு வெளியேறிட்டேன்.

தற்போது 29 வயதாகும் எனக்கு, பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போதில் இருந்தே பாலியல் தொந்தரவுகள் வந்துவிட்டன, பல்வேறு பாலியல் துன்புறுத்தல்களை அனுபவித்தேன்.

நான் திருநங்கை என்பதால், என்னை பள்ளியில் சேர்ப்பதற்கு அனுமதிக்க மருத்துவிட்டனர். அப்போது என் அப்பா, தலைமை ஆசிரியரிடம் கெஞ்சி கூத்தாடினார், அதன் பின் தலைமையாசிரியர் அனுமதி தந்தார்.

அனுமதி தந்த அவர் இரண்டு கண்டிஷன் போட்டார். ஒன்று, வகுப்புக்குள்ளே அனுமதிக்காமல், அவர் வகுப்பறையின் வாசலில் செருப்பு வைக்கும் இடத்துல உட்கார்ந்துதான் படிக்கணும். இரண்டாவது, பள்ளியில் யாரும் என்கூட பேசக்கூடாது. நானும் அவங்களோடு பேசக்கூடாது என்று கூறினார்.

வீட்டில் இருப்பவர்கள் தொடர்ந்து வற்புறுத்தியதால், அதற்கு நான் சம்மதித்துவிட்டேன், இதைத் தொடர்ந்து நான் பள்ளிக்கு சென்ற போது, அங்கிருக்கும் மாணவர்கள், மிகவும் இழிவு படுத்தக் கூடிய வார்த்தைகளால் என்னை கூப்பிடுவார்கள்.

அங்கு இருக்கும் கழிவறைக்கு போக முடியாது, ஏன் என்றால் நான் கழிவறைக்கு சென்றால் எப்படி என்று பார்ப்பார்கள். இதன் காரணமாகவே அங்கிருக்கு கழிவறைக்கு போகமாட்டேன்.

பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு வேகமாக செல்வேன், அப்போது சில இளைஞர்கள் எனக்கு முத்தம் கொடுத்துவிட்டு ஓடுவார்கள், பெண்ணாக இருந்தால் பொலிசில் புகார் அளிக்கலாம், திருநங்கையாக போய்விட்டேன, இதனால் இதை யாரிடம் கூறுவது என்று கூட தெரியாமல் தவித்திருக்கிறேன்.

வீட்டில் இருப்பவர்களும் என்னை காயப்படுத்தியதால், வீட்டை விட்டு வெளியே வந்தேன், அதைத் தொடர்ந்து என்னைப் போன்ற திருநங்கை உதவியுடன் பாலிடெக்னிக் படித்தேன், அதன் பின் கல்லூரி என படித்தேன், அங்கும் பல பிரச்சனைகள், சிலர் ஊரோரம் புளியமரம் என்று பாட்டுப் பாடி எல்லாம் கிண்டல் செய்வார்கள் இதை எல்லாம் தாண்டி தான் நாங்கள் இந்த சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

எங்களுக்கு என்று ஒரு பிரச்சனை வரும் போது அதை நாங்கள் யாரிடம் கூறுவது, இரவு ஒரு மணிக்கு எல்லாம் நாங்கள் இருக்கும் வீட்டிற்கு வந்து இளைஞர்கள் பிரச்சனை செய்துள்ளார்கள், இந்த தைரியம் அவர்களுக்கு யார் கொடுத்தது.

நான் சமூகப் போராட்டகளில் ஈடுபடும்போதெல்லாம் கைதுசெய்து கூட்டிட்டுப் போகும்போது பொலிசார் கண்ட இடங்களில் கை வைப்பார்கள், அப்போது பெண் பொலிசாரும் எங்களை தொடக் கூடாத இடங்களில் தொட்டு பார்ப்பார்கள், இந்த சமூகத்தில் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் எங்களை பாலியல் வன்கொடுமை பண்கிறார்கள்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என்று ஒரு சட்டம் இருக்கிறது, ஆனால் எங்களுக்கு என்று ஒரு சட்டம் இல்லை,அதைத் தான் நாங்கள் கேட்கிறோம், நாங்களும் மனிதர்கள் தான் இதை எப்போது இந்த சமூகம் உணரப் போகிறது என்று வருந்தியுள்ளார்.