காந்தியடிகள் புனே சிறையில் பயன்படுத்திய ராட்டை, லண்டனில் அடுத்த மாதம் ஏலம் விடப்பட உள்ளது. காந்தியடிகள் சுதந்திர போராட்ட காலத்தில் சுதேசி பொருட்களை பயன்படுத்தும் படி தொண்டர்களிடம் வலியுறுத்தி வந்தார்.
இதன் ஒரு பகுதியாக பருத்தி ஆடைகளை பயன்படுத்துவதற்காக அவர் ராட்டையை இயக்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
வெள்ளையனே வெளியேறு´ இயக்கத்தில் ஈடுபட்டதற்காக அவர் புனேயில் உள்ள எர்வாடா சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் எளிதில் கொண்டு செல்லக் கூடிய வகையில் மடக்கும் வகையிலான ராட்டையை பயன்படுத்தினார்.
இந்த ராட்டையை பின்நாளில் அமெரிக்க கிறித்துவ மத போதகர் பிளாய்டுக்கு அன்பளிக்காக கொடுத்தார். தற்போது இந்த ராட்டை, லண்டனில் உள்ள முல்லக் ஏல நிறுவனத்திற்கு வந்துள்ளது.
அடுத்த மாதம் 5ஆம் திகதி இந்த ராட்டை மற்றும் அவர் எழுதிய கடிதங்கள், புத்தகங்கள் உள்ளிட்டவையும் திப்பு சுல்தான் பயன்படுத்திய பொருட்களும் பஞ்சாபை ஆண்ட, ரஞ்சித் சிங் மன்னர் பயன்படுத்திய பொருட்களும் ஏலம் விடப்பட உள்ளன.
காந்தி பயன்படுத்திய ராட்டை 60 லட்ச ரூபாய்க்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.





