காணாமல் போனவர் தொடர்பில் தகவல் இல்லை : வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையில் மனைவி!!

530

மன்னார், பேசாலை காட்டாஸ்பத்திரி துறை பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமை 16 ஆம் திகதி காலை மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்களின் படகு கடலில் மூழ்கிய நிலையில், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில் மீனவர் ஒருவரை இராமேஸ்வர மீனவர்கள் மீட்டதோடு,மேலும் ஒரு மீனவர் காணாமல் போயுள்ளார்.

குறித்த மீனவர் காணாமல் போய் இன்றுடன் 7 நாட்களை கடந்து சென்றுள்ள போதும், குறித்த மீனவர் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையுடன் மனைவி மற்றும் உறவினர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், மன்னார் பேசாலை 7 ஆம் வட்டாரம் முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான அந்தோனி மரியதாஸ் (வயது 37) மற்றும், சிறுத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சம்சிங் அன்ரன் (வயது 23) ஆகிய இரு மீனவர்களும் கடந்த சனிக்கிழமை 16 ஆம் திகதி காலை 5.30 மணியளவில் காட்டாஸ்பத்திரி துறை பகுதியில் இருந்து படகு ஒன்றில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த மீனவர்கள் தாம் செல்ல வேண்டிய பகுதிக்கு செல்லும் முன் குறித்த மீனவர்களின் படகு கடலில் மூழ்கியுள்ளது. இதன் போது குறித்த இரு மீனவர்களும் கடலில் உயிருக்கு போராடியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பகுதிக்கு வந்த இராமேஸ்வர மீனவர்கள் கடலில் தத்தழித்துக் கொண்டிருந்த மீனவரான அந்தோனி மரியதாஸ் (வயது 37) என்பவரை கண்ட நிலையில் உடனடியாக குறித்த மீனவரை காப்பாற்றி இராமேஸ்வர பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

எனினும் மற்றறைய மீனவரான சம்சிங் அன்ரன் (வயது 23) காணாமல் போயுள்ளார். குறித்த இரு மீனவர்களும் மீண்டும் வீடு திரும்பாமை குறித்து அவர்களுடைய உறவினர்கள் பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையிலே காணமால் போன மீனவர்களில் ஒருவரான மன்னார் பேசாலை 7 ஆம் வட்டாரம் முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான அந்தோனி மரியதாஸ்(வயது 37) இராமேஸ்வர மீனவர்களினால் காப்பாற்றப்பட்டு இராமேஸ்வரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட விடயம் தெரிய வந்துள்ளது.

எனினும் மற்றைய மீனவரான சிறுத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சம்சிங் அன்ரன் (வயது 23) என்பவர் மீட்கப்படவில்லை.

இந்த நிலையில் உனடியாக கடற்படையினரின் உதவியுடன் தேடியும் குறித்த மீனவர் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. காப்பாற்றப்பட்டு இந்திய இராமேஸ்வரம் பொலிஸரிடம் ஒப்படைக்கப்பட்ட மன்னார் பேசாலை 7 ஆம் வட்டாரம் முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான அந்தோனி மரியதாஸ் (வயது-37) என்ற மீனவரை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை மாவட்ட மீன்பிடி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் காணாமல் போயுள்ள சிறுத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சம்சிங் அன்ரன் (வயது 23) என்ற மீனவர் தொடர்பிலான தகவல் எவையும் தெரியாத நிலையில், குறித்த மீனவர் காணாமல் போய் இன்று சனிக்கிழமையுடன் 7 நாட்களாகின்ற நிலையில் குறித்த குடும்பஸ்தர் மீண்டும் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையுடன் மனைவி மற்றும் உறவினர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.