தலிபான்களுக்கு எதிராக போராடும் மலாலாவுக்கு பேய் என்றால் பயம் என தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பெண்களின் கல்விக்காக குரல் கொடுத்த மலாலாவை தலிபான்கள் சுட்டனர்.
இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய மலாலாவுக்கு லண்டன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது பூரணமாக குணமடைந்துள்ளவர் பிர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் என்ற பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார்.
இந்நிலையில் மலாலா ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் பேய் என்றால் தனக்கு பயம் என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில் பேய் என்றால் சிறிது பயம் தான். நாங்கள் பேயை பீடியான் என்றே அழைப்போம். அது இருட்டான இடங்களில் வரும் என அஞ்சுபவள் நான். தலிபான்கள் எங்களைப் பார்த்துப் பயப்படுகிறார்கள் பெண்களைப் பார்த்து அஞ்சுகிறார்கள். பெண் என்பவள் மாபெரும் சக்தி.
அத்தகைய பெண்கள் கல்வியறிவு பெற்றால் அவளது சக்தி இன்னும் பலமடங்கு அதிகமாகும் என அஞ்சுகிறார்கள். எனவே தான் சமூகத்தில் பெண்கள் அங்கம் வகிப்பதையோ, சமூக முன்னேற்றத்தில் பங்கு பெறுவதையோ அவர்கள் விரும்புவதில்லை.
பெண்களின் பணி சமையல் செய்வது, குடும்பத்திற்கு உணவு பரிமாறுவது, குழந்தைகள் பெறுவது, அவர்களை வளர்ப்பது என்பது மட்டும் தான் என நினைக்கிறார்கள் தலிபான்கள்.
எதிர்காலத்தில் பாகிஸ்தானின் பிரதமராக ஆசைப்படுகிறேன், நாட்டின் கல்வி, ஆரோக்கியம் போன்ற வளங்களை அதிகப்படுத்த விரும்புகிறேன். நான் இப்போது அதே பழைய மலாலா தான், பெண் கல்விக்காகப் போராடும் அதே மலாலா தான் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மலாலாவை கொல்லாமல் விடமாட்டோம் என தலிபான்கள் தொடர்ந்து மிரட்டி விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.





