கல்லூரி பேராசிரியர் பணத்திற்காக படுகொலை!!

545

lecturer_murderசென்னை, கேளம்பாக்கத்தில் கல்லூரி பேராசிரியர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்கேளம்பாக்கத்தை அடுத்த தையூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் எப்சிபா(59). இவர் கல்லூரி பேராசிரியை.

இவருடைய கணவர் இறந்து விட்டதால் மகன் கிப்சனுடன் தங்கி இருந்தார். கிப்சன் மறைமலை நகரில் உள்ள கணனி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

கடந்த 17ம் திகதி இரவு கிப்சன் வேலை முடித்து வீட்டிற்கு வந்த போது அறையில் எப்சிபா கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்து இருந்த 10 பவுன் நகை, கைப்பேசி, 5 ஆயிரம் பணம் கொள்ளை போய் இருந்தது.

இது தொடர்பாக கேளம்பாக்கம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வீட்டில் வேலை செய்த அதே பகுதியை சேர்ந்த பிரமிளா தனது கள்ளக்காதலன் முருகனுடன் சேர்ந்து பேராசிரியை எப்சிபாவை நகை, பணத்திற்காக கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து பிரமிளா அளித்த வாக்குமூலத்தில், கடந்த ஜனவரி மாதம் எப்சிபா மகனுடன் இங்கு குடியேறினார். அவர் வந்தது முதல் நான்தான் வீட்டு வேலைகளை செய்து வந்தேன்.

எனது கணவர் அன்புவை பார்ப்பதற்காக அவரது நண்பர் புதுப்பாக்கத்தை சேர்ந்த முருகன் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவார். அப்போது எங்களுக்குள் கள்ளக்காதல் ஏற்பட்டது.
இருவரும் ஜாலியாக இருந்து வந்தோம். இதனால் அதிகமாக செலவு ஏற்பட்டதால் பணம் இல்லாமல் தவித்தோம்.

இந்நிலையில் பேராசிரியை எப்சிபா அதிக நகை அணிந்து இருந்ததை கண்டேன். எனவே அவற்றை கொள்ளையடித்து உல்லாச வாழ்க்கை வாழ கள்ளக்காதலன் முருகனிடம் கூறினேன். இதனைத் தொடர்ந்து கடந்த 17ம் திகதி காலை நான் வழக்கமாக வேலைக்கு சென்றேன். கதவை தட்டியதும் எப்சிபா கதவை திறந்து வீட்டிற்குள் சென்று விட்டார்.

அப்போது வெளியில் மறைந்து நின்ற முருகன் நைசாக சமையல் அறைக்குள் சென்று பதுங்கி கொண்டார். சிறிது நேரம் கழித்து அவர் வெளியே வந்ததை பார்த்த எப்சிபா நீ யார், எப்படி உள்ளே வந்தாய் என அவரிடம் கேட்டார்.

உடனே நாங்கள் இருவரும் சேர்ந்து எப்சிபாவை தாக்கியபோது திமிறியதால் அவரது தலையை முருகன் சுவற்றில் மோதினார். இதில் மயக்கமடைந்து கீழே விழுந்தவுடன் நாங்கள் அவரது கழுத்தை நெரித்து கொன்றோம் என்றும் எப்சிபா இறந்தது உறுதியானவுடன் நகை மற்றும் பீரோவில் இருந்த பணத்தையும் திருடி சென்று விட்டோம் எனவும் கூறியுள்ளார்.

இவர்களிடமிருந்து 10 பவுண் நகை, 5 ஆயிரம் பணம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.