இந்தியாவின் பின்லேடன் கைது!!

496

இந்திய மாநிலம் குஜராத்தில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட இந்தியாவின் பின்லேடன் டெல்லி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் நீண்ட 9 ஆண்டுகளாக பொலிசாரால் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு, யூலை 26ம் திகதி குஜராத்தில் அகமதாபாத் நகரில் 21 குண்டுகள் வெடித்தன. இதில் 56 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்புக்கு முக்கிய காரணமாக இருந்தவர் சிமி-ஐஎம் அமைப்பைச் சேர்ந்த அப்துல் சுபான் குரோஷி. இந்தியாவில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பை நிறுவ இவர் முயற்சி செய்து வந்தார். இதையடுத்து இவரை தேடப்படும் குற்றவாளியாக குஜராத் பொலிஸார் அறிவித்தனர்.

குரேஷி என்ற தவுகீர் எனும் பெயரில் வலம் வந்த அப்துல் சுபான் குரேஷியை தேசிய புலனாய்வு அமைப்பினரும் தேடி வந்தனர். கடந்த 2006ம் ஆண்டு மும்பையில் நடந்த புறநகர் ரயில் குண்டுவெடிப்பிலும் இவருக்கு தொடர்பு இருந்தது.

இதையடுத்து குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவினரும், அகமதாபாத் குற்றவியல் பிரிவினரும், டெல்லி சிறப்பு பொலிஸாருடன் இணைந்து குரேஷியை தேடி வந்தனர்.

காவல்துறை வட்டாரங்களில் இந்தியாவின் பின்லேடன் என்று குரேஷி அழைக்கப்பட்டார். தனது தோற்றத்தையும், பெயரையும் பலமுறை மாற்றி பொலிஸாரிடம் தப்பி உள்ளதால் இந்த பெயரை பொலிஸார் வைத்தனர்.

மேலும் வெடிகுண்டுகள் செய்வதிலும் திறன்படைத்தவரான குரேஷி, பெங்களூரு, ஐதராபாத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

கடந்த 1998ம் ஆண்டு சிமி இயக்கத்தில் சேர்ந்த குரேஷி, அதன்பின் இந்தியாவில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பை நிறுவ முயன்றுள்ளார்.

இந்நிலையில், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி நேபாளத்துக்கு தப்பிச் சென்ற குரேஷி அங்கு தலைமறைவாக வாழ்ந்துவந்தார். தற்போது மீண்டும் இந்தியாவுக்குள் இந்தியன் முஜாகிதீன் அமைப்பை நிறுவ முயன்றபோது குரேஷி கைது செய்யப்பட்டுள்ளார்.