மத்தியபிரதேசத்தில் வளர்ப்பு தந்தையொருவர் 3 வயது சிறுவனை தலைகீழாக கட்டித் தொங்கிவிட்டு செருப்பால் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேசத்தின் ஷாஜாபூரிலேயே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சம்பவத்தின் போது தடுக்க வந்த சிறுவனின் தாய்க்கும் அடி விழுந்ததாகவும், அக்கம்பக்கதினர் சிறுவனை மீட்க முயன்றும் பயன் அளிக்கவில்லை எனவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
சிறுவனின் தந்தை தர்மேந்திரா 1 முதல் 10 வரை எண்களை மனனம் செய்து ஒப்புவிக்க சொல்லி சிறுவனை வலியுறுத்தியுள்ளார், ஆனால் சிறுவனுக்கு 1 முதல் 10 வரை மனப்பாடமாக தெரியாததால் ஒப்புவிக்கும் போது திணறியுள்ளான், இதனால் கடும் ஆத்திரமடைந்த தர்மேந்திரா சிறுவனை தாக்க தொடங்கியுள்ளார்.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்கு வந்த சுற்றத்தாரிடமும் கோபத்தை காட்டியுள்ளார், செய்வதறியாது திகைத்தபடி சிறுவனை காப்பாற்ற முயன்ற மனைவியையும் அடித்துள்ளார் தர்மேந்திரா.
இதைஅடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக 100 க்கு போன் செய்து பொலிஸ்க்கு தகவல் தெரிவித்தனர், பொலிஸ் வருவதை அறிந்த தர்மேந்திரா தப்பியோடியுள்ளார்.
தந்தையின் சித்ரவதையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவனுக்கு கண், உதடு, கை, கால் மற்றும் இடுப்பு பகுதிகளில் பலத்த காயம் இருந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.
தப்பியோடிய தர்மேந்திராவை பிடிக்க தீவிரம்காட்டி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.






