மாயமான விமானத்தை தேடும் இறுதி முயற்சி : 70 மில்லியன் டொலர் உடன்படிக்கை!!

690

239 பேருடன் காணாமல் போனதாக கூறப்படும் MH370 என்ற மலேசிய விமானத்தை தேடும் இறுதி முயற்சியாக அமெரிக்க நிறுவனம் ஒன்று நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு பயணித்த MH370 என்ற பயணிகள் விமானம் காணாமல் போனது. குறித்த விமானமானது இந்திய பெருங்கடலுக்குள் (தெற்கு பகுதியில்) வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து விமானத்தை தேடும் பணியில் விமானங்கள், கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன.

1046 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த விமானம் தொடர்பில் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து தேடுதல் நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

குறித்த விமானம் காணாமல் போனதை தொடர்ந்து பல்வேறு வதந்திகள் வெளிவரத்தொடங்கின. விமானி தற்கொலை செய்துகொள்வதற்காக விமானத்தை கடத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் வேற்று கிரகவாசிகள் MH370 விமானத்தை கடத்தி சென்று விட்டதாகவும் வதந்திகள் வெளியிடப்பட்டன.

எனினும், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக 2015ஆம் ஆண்டு ரீயூனியன் என்ற தீவின் கடற்கரையில் விமானத்தின் பாகம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

பின்னர் குறித்த பாகம் MH370 விமானத்தினுடையது என உறுதிசெய்யப்பட்டது. இதன் பின்னர் விமானம் தொடர்பில் எந்த ஒரு ஆதாரங்களும் கிடைக்காத நிலையில் கடந்த ஆண்டு தேடுதல் நடவடிக்கை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் குறித்த விமானத்தை தேடும் இறுதி நடவடிக்கையை மலேசிய அரசு முன்னெடுத்துள்ளது. இதற்கான “ஒசேன் இன்ஃபினிட்டி” என்ற அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் உடன்படிக்கை செய்துகொண்டுள்ளது.

இந்த உடன்படிக்கைக்கு மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் கடந்த 6ஆம் திகதி அனுமதி வழங்கியுள்ளார். இதன்படி, அவுஸ்திரேலிய கடல் எல்லைக்கு உட்பட்ட கடல்பகுதியில் சுமார் 25 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் தேடுதல் நடத்தப்படவுள்ளது.

குறித்த உடன்படிக்கையின் பிரகாரம் “90 நாள்களுக்குள் தேடுதலை நடத்தி முடிக்கப்பட வேண்டும். இதற்காக 70 மில்லியன் டொலர் வழங்குவதற்கு இணங்கப்பட்டுள்ளது.

இந்த தேடுதல் நடவடிக்கையின் போது எதுவும் கண்டறியப்படாவிட்டால் பணம் எதுவும் வழங்கப்பட மாட்டாது என அந்த உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ன.