வவுனியாவில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் 27 வயது இளைஞனுக்கு வவுனியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
வவுனியா மகாறம்பைக்குளம் ஸ்ரீராமபுரம் பகுதியில் 2011ம் ஆண்டு இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் 27 வயது இளைஞன் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ம்திகதி ஸ்ரீராமபுரம் எனும் இடத்தில் ஒரே ஊரை சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட சண்டையில் சிக்கன் திருச்செல்வம் என்பவருக்கு மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டிற்காக ஸ்ரீராமபுரம் பிரதேசத்தை சேர்ந்த மூவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிவான் நீதிமன்றிலே முன்னிலைப்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டு ஆரம்ப விசாரணைகள் இடம்பெற்று வந்தது.
இதன் பின்னர் 2017ம் ஆண்டு 10ம் மாதம் 02ம் திகதி சட்டமா அதிபரினால் வவுனியா மேல் நீதிமன்றத்திலே இந்த எதிரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணைகள் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் இடம்பெற்று வந்ததுடன் வழக்கு தொடுனர் தரப்பில் வழக்கினை அரச சட்டவாதி ஐ.எம்.எம்.பாகிம் நெறிப்படுத்தியிருந்தார்.
இந்த வழக்குடன் தொடர்புடைய எதிரிகளான இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளுக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவ்விருவரும் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதுடன், முதலாம் எதிரி தாக்கியதால்தான் மரணம் சம்பவித்துள்ளது என்பது சந்தேகத்திற்கப்பால் நிரூபிக்கப்பட்டு இன்றைய வழக்கில் முதலாம் எதிரிக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனால் மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.






