உலகின் மிக உயரமான நட்சத்திர ஹோட்டல் துபாயில் திறக்கப்பட்டது!!

721

 
உலகின் மிக உயரமான நட்சத்திர ஹோட்டல் துபாயில் இன்று திறக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக உயரமான கட்டிடங்களின் தலைநகரமாக துபாய் விளங்குகிறது. இங்குள்ள புர்ஜ் கலீஃபா பற்றி நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இந்நிலையில் துபாயின் சேக் சையது சாலையில் உலகின் மிக உயரமான நட்சத்திர ஹோட்டல் கட்டப்பட்டுள்ளது, 2008ம் ஆண்டு முதல் கட்டப்பட்டு வந்த இந்த புதிய ஹோட்டல் இன்று திறக்கப்பட்டுள்ளது.

75 மாடிகளுடன் 528 தங்கும் அறைகளைக் கொண்டு பிரம்மாண்டமாக இந்த ஹோட்டல் உருவாக்கப்பட்டுள்ளது. நீச்சல்குளம், உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இந்த சொகுசு ஹோட்டலில் உள்ளன.

லண்டனின் பிக் பென் கடிகாரம் அல்லது பாரிசின் உலகப் புகழ் பெற்ற ஈஃபிள் கோபுரத்தை விடவும் இந்த ஹோட்டல் பலமடங்கு பெரியது.

உலகின் மிக உயரமான விடுதியாக கருதப்படும் துபாயின் ஜே.டபிள்யு. மரியாட் மார்க்குஸ் விடுதியை விடவும் ஒரு மீட்டர் கூடுதலான உயரம் உடையது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரம்மாண்டமான ஹோட்டலின் உள்கட்டமைப்பு பார்ப்பவர்களின் மனதை கொள்ளையடிக்கும் வகையில் உள்ளது.

எண்ணெய் வளம் மிக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பல ஷொப்பிங் மால்கள், ஏராளமான ஆடம்பர சுற்றுலா இடங்கள் மற்றும் ஒரு ஸ்கை ரிசார்ட் ஆகியவற்றின் மூலம் 2020ம் ஆண்டுக்குள் சுமார் 20 மில்லியன் சுற்றுலா பயணிகளை தன்னகத்தே ஈர்க்க திட்டமிட்டு கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.