13வது திருத்தச் சட்டம் மற்றும் மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை உள்ளவாறே மாகாணசபையில் நடைமுறைப்படுத்துவதற்கு சட்டத்தில் இடமில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நல்லூர் பிரதேச சபையில் நேற்று இடம்பெற்ற மாகாண சபை உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த வட மாகாண முதலமைச்சர்..
ஆளுநருக்கு அளித்திருக்கும் சலுகைகள் மாகாணசபையை சிறப்பாக வழிநடத்துவதற்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.
ஜனாதிபதியின் தற்துணிவின் பேரில் ஆளுநர் நியமிக்கப்படுவதால் ஆளுநரின் தீர்மானங்கள் அரசியல் சார்பானதாக அமைகின்றது.
எனவே மாகாணசபையின் நிர்வாகத்தை ஆளுநனரின் தற்துணிவு அதிகாரம் முடங்கச் செய்கின்றது. மக்களால் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளின் தீர்மானங்களை ஆளுநர் உதாசீனம் செய்யக் கூடியதாக நடைமுறை அமைந்துள்ளன.
ஜனாதிபதியே பிரதான செயலாளரை நியமிப்பதால், ஜனாதிபதியை விமர்சிக்க அல்லது உதாசீனம் செய்ய எந்த பிரதான செயலாளருக்கும் மனம் வராது. ஆகவே ஜனாதிபதியின் அரசியல் ரீதியான எதிர்பார்ப்பு எந்த நிலையிலும் மறுப்புக்கு உட்படாத நிலையே தொடர்கிறது.
மாகாண பகிரங்க சேவை அலுவலர்கள் சம்பந்தமாக ஆளுநருக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் மாகாணசபையின் அதிகாரங்களை வெகுவாக குறைக்கின்றன. இவ்வாறான 13 வது திருத்தச்சட்டம் ஆளுநருக்கு கூடியளவு சலுகைகளையும் மக்களுக்கு குறைந்தளவு நன்மைகளையும் வழங்கியிருக்கிறது என்பது புலப்படும்.
அரசியல் யாப்பின் உறுப்புரிமை 154 LR இன் கீழ் ஆளுநரால் விடுக்கப்படும் பறைசாற்றல்கள் எந்த நீதிமன்றத்தாலும் கேள்விக்கிடமாக்கப்பட முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
அங்கும் அவருக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
மாகாணசபைகள் தமக்கே சகல உரித்தும் உள்ளன என்று உறுதியாக கூற முடியாத நிலையே தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. மாகாண சபைக்கான உரித்துக்களை ஆளுநனர் தனக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் மூலம் தடை செய்யக் கூடியதாக சட்டம் இருக்கிறது.





