கிரிக்கெட் சாதனை மன்னன் சச்சின் டெண்டுல்கர் தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அடுத்த மாதம் 14ம் திகதி தொடங்கி நடைபெற உள்ள டெஸ்ட் போட்டிதான் சச்சினின் கடைசி போட்டியாகும். இப்போட்டி அவரது சொந்த ஊரான மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.
போட்டியின் முடிவில் அவருக்கு பிரமாண்டமான பிரிவுபசார விழா நடத்தவும் கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது. இதனால் சச்சின் விளையாடும் கடைசி போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
மேலும் அந்த போட்டியில் சச்சின் சதம் அடிக்க வேண்டும் என்றும் அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். இந்நிலையில் சச்சினின் வரலாற்று சிறப்பு மிக்க 200வது டெஸ்ட் போட்டியில் அவரை டக் அவுட் ஆக்கி பிரிவுபசார விழாவின் உற்சாகத்தை குலைக்க மேற்கிந்திய தீவுகள் அணி தயாராகி வருகிறது.
சச்சினை முதல் பந்திலேயே ஆட்டமிழக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக மேற்திந்திய தீவுகள் அணியின் தலைவர் டிரன் சமி கூறியுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே வான்கடே மைதானத்தில் சச்சினின் 100வது சதம் அடிக்கும் முயற்சியை 94 ஓட்டங்களில் முடிவுக்கு கொண்டு வந்ததுபோல் இந்த முறையும் ஆட்டமிழக்க செய்வோம் என்று சமி தெரிவித்தார்.





