வவுனியா விபுலானந்தா கல்லூரியின் விளையாட்டு மைதானத்திற்கான நிதியம் ஆரம்பம்!!

1276

 
வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரிக்கு விளையாட்டு மைதானம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்கான ஊடக சந்திப்பு ஒன்று இன்று (25.03) கல்லூரியின் அதிபர் பொன்னையா சிவநாதன் தலைமையில் நடைபெற்றது.

1962 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியானது பண்டாரிக்குளம், உக்குளாங்குளம், வேப்பங்குளம், தவசிக்குளம், கூமாங்குளம் மற்றும் தோணிக்கல் கிராமங்களைச் சேர்ந்த 1200 குடும்பங்களைச் சேர்ந்த 2100 மாணவர்கள் இப்பாடசாலையில் கல்வி கற்று வருகிறார்கள்.

இப்பாடசாலைக்கு நிரந்தரமான விளையாட்டு மைதானம் இல்லாமை ஒரு பெரும் குறையாகவே இருந்து வருகிறது.
இவ் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த பாடசாலை அபிவிருத்தி குழுவின் செயலாளர் எஸ்.சிவதர்சன் மற்றும் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் ஆர்.சுரேந்தர்..

பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரிக்கு, விளையாட்டு மைதானம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு நிதியம் ஒன்றை ஆரம்பித்து நிதிகளை பெற்று வருகிறோம். அந்தவகையில் வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் ஜனாதிபதிக்கும் மைதானம் ஒன்றை பெற்றுக் கொள்வது தொடர்பாக மகஜர் ஒன்றை அனுப்பியிருந்தோம்.

இருந்தபோதும் பாடசாலைக்க ஒரு மைதானம் இல்லாமையானது பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகிறோம். பாடசாலையின் மைதானத்திற்கு காணிகளை இனங்கண்டு அதை பெற்றுக்கொள்ள முயற்சி மேற்கொண்ட தருணங்களில் இப்பாடசாலையின் வளர்ச்சியை பொறுக்க முடியாதவர்களால் அக்காணிகள் கூறுபோட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்கள் வேறு விளையாட்டு மைதானங்களில் பயிற்சிகளையும் விளையாட்டுக்களையும் மேற்கொண்டு வருகிறார்கள். பெற்றோர்கள் பழைய மாணவர் மற்றும் நலன் விரும்பிகள் தங்கள் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என கோரிக்கையை விடுத்துள்ளனர்.