மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் காணாமல் போன 8 பிள்ளைகளின் தந்தை நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 26 ஆம் திகதி முதல் காணாமல் போன 71 வயதாகிய மனுவேல் பிள்ளை (அல்பேட்) நேற்று மாலை மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய், உவரி காட்டுப்பகுதியில் இருந்து சிதைவடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த காட்டுப்பகுதியில் சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக மன்னார் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போதே சடலம் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் இருந்து காணாமல் போன மனுவேல் பிள்ளை (அல்பேட்) என்பவருடையது என தெரிய வந்துள்ளது.
விடத்தல் தீவை பிறப்பிடமாகவும், மன்னாரை வதிவிடமாகவும் கொண்ட 8 பிள்ளைகளின் தந்தையான மனுவேல் பிள்ளை (அல்பேட்) கடந்த மாதம் 26ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
கடந்த 26ஆம் திகதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. அவரை தேடிய போதும் எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை என மனைவி தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.










