வவுனியாவில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மேதின ஊர்வலமும் கூட்டமும் நாளை 1ம் திகதி நடைபெறும் என அக் கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் நி.பிரதீபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கட்சியின் அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது..
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மே 01 ஆம் திகதியே புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி மேதினத்தை நடாத்தும். இன்று அத்தியாவசிய உணவுப் பொருட்களினதும் அன்றாட பாவனைப் பொருட்களினதும் தொடர் விலை அதிகரிப்புகளினாலும், உயர்ந்து செல்லும் வாழ்க்கைச் செலவின் பாதிப்புகளாலும் நாட்டின் ஏகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் கடன் தொல்லைகளாலும், அரசாங்கத்தின் வரி விதிப்புகளாலும் மக்களின் மீதான சுமை எல்லையற்று அதிகரித்துச் செல்கின்றது. இவற்றுக்கு மூன்று வருடங்களைக் கடந்தும் மைத்திரி – ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கமானது எவ்வித தீர்வையோ, பரிகாரத்தையோ இதுவரை முன்வைக்கவில்லை.
அதற்கான அடிப்படைக் காரணம் தாராள இறக்குமதியும், தனியார்மயமாக்கலும், நுகர்வுச் சந்தைக்காக நாட்டின் கதவுகள் அகலத் திறந்து விடப்பட்டமையுமே ஆகும். இது நவகாலணிய, நவதாராள, உலகமயமாதல் பொருளாதார முறையின் பிரதிபலிப்பாகும்.
இவற்றால் பயனடைவோர் இந்நாட்டின் சாதாரண உழைக்கும் மக்கள் அல்லர். மாறாக அந்நிய இராட்சதப் பல்தேசியக் கம்பனிகளும், உள்நாட்டுத் தரகு முதலாளிகளுமேயாவார். இத்தகைய முதலாளித்துவக் கட்டமைப்பைப் பேணிப் பாதுகாப்பதில் கடந்த நாற்பது வருடங்களில் இரண்டு பிரதான ஆளும் வர்க்கக் கட்சிகளும், அவற்றின் தலைமைகளும் சிங்கள பௌத்தப் பேரினவாதப் போர்வையுடன் போட்டி போட்டு ஆட்சி அதிகாரத்தைப் பாதுகாத்து முன்னெடுத்துவந்துள்ளன.
அன்று ஜே.ஆர். ஆரம்பித்து வைத்த மோசமான இத் தாரளமய பொருளாதார முறையின் நாசகாரப் பயணத்தை இன்றைய மைத்திரி – ரணில் தலைமையிலான ஆளும் வர்க்கத்தினர் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கின்றனர்.
தவறானதும், நாட்டுக்கும் மக்களுக்கும் அழிவுகளைத் தந்துகொண்டிருப்பதுமான இன்றைய நவதாராளப் பொருளாதாரக் கொள்கையும் நடைமுறைகளும் தடுத்து நிறுத்தப்படாதுவிட்டால், மக்கள் எவ்வகையிலும் விமோசனம் அடையமுடியாத நிலை ஏற்படும். இதனை அனைவரும் அரசியல் பொருனாதார அடிப்படையில் உணர்ந்துகொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.
அதனாலேயே எமது கட்சி எதிர்வரும் உலகத் தொழிலாளர்களின் சர்வதேச போராட்ட தினமான மேதினத்தில் உழைக்கும் மக்களின் அதிகாரத்தை வென்றெடுக்க அனைவரையும் அணிதிரளுமாறு அறைகூவல் விடுத்துநிற்கின்றது.
அதேவேளை பௌத்த தினமான வெசாக் தினத்தையும், அதற்கான கொண்டாட்டங்களையும் சாட்டாக வைத்துச் சர்வதேச தொழிலாளர் தினத்தை ஏழாம் திகதிக்கு அரசாங்கம் மாற்றியிருப்பதை எமது கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
எனவே, மே முதலாம் திகதி உலக அளவில் நிகழ்த்தப்படுகின்ற சர்வதேச தொழிலாளர் தினம் அதே நாளிலேயே இலங்கையிலும் இடம்பெற வேண்டும் என்பதை எமது கட்சி வலியுறுத்துகின்றது.
இவ்வாறு கட்சிகள், தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புக்களுடன் இடம்பெற்ற மேதின தயாரிப்புக்கான சந்திப்பில் உரையாற்றிய புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் பொதுச்செயலாளர் சி.க.செந்திவேல் அவர்கள் தெரிவித்தார். அவர் மேலும் தனது உரையில்,
இன்றைய ஆட்சியில் ஜனாதிபதி மைத்திரியும், பிரதமர் ரணிலும், எதிர்த்தரப்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவும் கடுமையான அரசியல் மோதலில் களமிறங்கி நிற்கிறார்கள். இவர்களுடைய மோதல் நாட்டையும் மக்களையும் சூழ்ந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இடம்பெறவில்லை.
மாறாக, தரகு முதலாளிய உயர் வர்க்க ஆட்சி அதிகாரத்தைத் தமது பிடிக்குள் வைத்து, அந்நிய மூலதனங்களுக்கும், உள்நாட்டில் தமது கூட்டாளிகளுக்கும் சேவை செய்வதற்கேயாகும்.
இதனாலேயே நாட்டின் மகா திருடர்களும், கள்வர்களும் பாராளுமன்ற ஜனநாயகத்தின் பெயரால் பதவிகளில் தொடர்ந்து வருகிறார்கள். மக்கள் எதிர்பார்ப்பதுபோன்று இவர்களில் எவரும் கடந்த காலங்களில் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் குற்றங்களுக்காக முறையாக விசாரிக்கப்படவோ, தண்டிக்கப்படவோ மாட்டார்கள் என்பதையே இதுவரையான நிகழ்வுகள் எடுத்துக்காட்டியுள்ளன.
ஏனெனில், உயர்வர்க்க மேட்டுக்குடி அரசியலில் இவர்கள் அனைவரும் அண்ணன் தம்பிகளாகவே இருந்துவருகின்றனர். இவ்வாறே, சிறுபான்மைத் தேசிய இனங்களான, வடக்குக் கிழக்குத் தமிழர், மலையகத் தமிழர், முஸ்லீம்கள் மத்தியிலான அரசியலிலும் பதவிகள் மூலமான ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் தமதாக்கிக்கொள்வதிலேயே அங்குள்ள முதலாளித்துவ அரசியல் சக்திகள் முனைப்புக் காட்டி நிற்கின்றன.
அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல்களிலும், சபைகளின் ஆட்சியைக் கைப்பற்றும் செயற்பாடுகளிலும் இது வெளிப்பட்டுநின்றமையைக் காணமுடிந்தது.
வடக்குக் கிழக்கு, மலையக, முஸ்லீம் அரசியல் தலைமைகளின் உயர் வர்க்க, மேட்டுக்குடி, பிற்போக்கு, ஆதிக்க அரசியல் போக்கிற்கு அது சிறந்த சாட்சியாக அமைந்தது.
எனவே, உழைக்கும் மக்கள் இவ் அரசியல் பிளைப்புவாதச் சக்திகளை நிராகரித்து, உழைக்கும் மக்களின் அதிகாரத்தை வென்றெடுக்க, எதிர்வரும் மே 01 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் புத்தூரிலும், வன்னியில் வவுனியா நகரத்திலும், மலையகத்தில் இராகலையிலும் இடம்பெறவுள்ள மேதின பேரணிகளிலும், பொதுக்கூட்டங்களிலும் அனைவரையும் அணிதிரளுமாறு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி அறைகூவல் விடுக்கின்றது. எனவும் குறிப்பிட்டார்.







