வவுனியாவில் நடைப்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு புதிய இடம் : நகரசபைத் தலைவர்!!

568

“வவுனியாவில் நடைப்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு சிறந்த காற்றோட்டத்துடன் கூடிய புதிய இடமொன்றை அமைத்துக்கொடுக்கவுள்ளதாக” வவுனியா நகரசபையின் தலைவர் இ.கௌதமன் தெரிவித்தார்.

வவுனியா குளப்பகுதியில் நீர்ப்பாசனத்திணைக்களத்தால் பராமரிக்கப்பட்டுவரும் நீர் சுத்திகரிப்பு பகுதியில் அண்மையில் நடைப்பயிற்சி செய்யக்கூடிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் அதனை பார்வையிட்டதன் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வவுனியாவில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. இதன் ஓர் அங்கமாக வவுனியா மாவட்ட விளையாட்டு வீரர்கள் நகரசபை மைதானத்தினை சிறந்த மைதானமாக மாற்றுமாறு கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

நடைப்பயிற்சியில் ஈடுபடும் பகுதியில் புற்கள் இல்லாது காணப்படுவதனாலும் அப்பகுதி மழை காலங்களில் நீர் தேங்கி நிற்பதாலும் விளையாட்டு வீரர்களுக்கு அசௌகரியம் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே இதனை நாம் ஆராய வேண்டிய தேவையுள்ளது. இந் நிலையில் நீர்ப்பாசன திணைக்களத்தினால் பராமரிக்கப்படும் வவுனியா குளப்பகுதியில் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள பகுதியில் சிறந்த காற்றோட்ட வசதி மற்றும் நடைப்பயிற்சிக்கு ஏற்ற ஒழுங்குகளுடன் நீர்ப்பாசன திணைக்கத்தினால் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அதனை சூழவும் சிறந்த இடவசதிகள் இருப்பதனால் அதனை ஓய்வு எடுக்கும் பகுதியாகவும் மாற்றியமைப்பது தொடர்பாக நீர்ப்பாசன திணைக்களத்தினருடன் கலந்தாலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.