தமிழகத்தில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர், தான் திருடவில்லை என்று தாமாக கூறியதால் பொலிசாரிடம் சிக்கிய சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
சென்னை கோயம்பேட்டில், பூ வியாபாரம் செய்து வரும் மாரிமுத்து என்பவர் கடந்த 2ஆம் திகதி இரவு, காற்று வர வேண்டும் என்பதற்காக தனது வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கியுள்ளார். திறந்திருந்த வீட்டிற்குள் புகுந்த திருடர்கள், சத்தமில்லாமல் பீரோவில் இருந்த 15 சவரன் நகை மற்றும் 35 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, காலையில் கண் விழித்த மாரிமுத்து மற்றும் குடும்பத்தினர், திருடு போனதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், மண்ணடி பகுதியில் இரவில் இளைஞர் ஒருவர் சாலையில் நின்று கொண்டிருந்தார். அச்சமயம் அங்கு வந்த பொலிசார், சந்தேகத்தின் பேரில் குறித்த இளைஞரை விசாரித்துள்ளனர்.
அப்போது குறித்த இளைஞர் தாமாக முன் வந்து தான் திருடவில்லை என்று கூறியுள்ளார். மேலும், தன் உடைகளை சோதித்துக்கொள்ளுங்கள் என்று கூறி தனது உடைகளை கழற்றிக் காட்டியுள்ளார்.
இளைஞரின் செயல் பொலிசாருக்கு சந்தேகத்தை வலுக்கச் செய்தது. இதனைத் தொடர்ந்து, குறித்து இளைஞரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற பொலிசார், அவரிடம் நடைத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், அவரின் பெயர் பவுல்ராஜ் என்றும், பூ வியாபாரி மாரிமுத்துவின் வீட்டில் நண்பருடன் சேர்ந்து அவர் திருடியதும் தெரிய வந்தது.
பின்னர், நகை மற்றும் பணத்தை பவுல்ராஜிடம் இருந்து பறிமுதல் செய்த பொலிசார், தப்பிய மற்றொரு இளைஞரை தேடி வருகின்றனர்.
மேலும், கோடை காலத்தில் காற்றுக்காக கதவை திறந்து வைத்துவிட்டு தூங்க வேண்டாம் என்று, சென்னை பொலிசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.






