வித்தியா கொலை வழக்கில் சாட்சியை அச்சுறுத்திய நபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!!

614

பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சாட்சியை அச்சுறுத்திய குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு நேற்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.எம்.எல். றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே சந்தேகநபர் சார்பில் ஆஜராகியுள்ள இலவச சட்ட ஆலோசனை ஆணைக்குழுவினால் மேற்கொள்ள வேண்டிய மேன்முறையீட்டில் நிலவும் தாமதம் காரணமாக குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பிணை மனுவை தாக்கல் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் நீதவான் இன்று ஆணைக்குழுவிடம் வினவிய போது, பிணை மனு சமர்ப்பிப்பதற்கான அனைத்து ஆவணங்களும் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர் வித்தியா கொலை வழக்கில் குற்றவாளியா என்பது குறித்து ஆராய்வதாக ஆணைக்குழு சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்துள்ளார்.

எனினும், வித்தியா படுகொலை வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், சாட்சியை அச்சுறுத்தியமை தொடர்பில் பிறிதொரு வழக்கே சந்தேகநபர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், பிணை கோருவது தொடர்பான மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் செயற்பாடுகளை துரிதப்படுத்துமாறு இலவச சட்ட ஆலோசனை ஆணைக்குழுவிற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.