இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதால், நாட்டு மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய, இந்த எச்சரிக்கையை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு இன்றிரவு அடைமழை பெய்யக் கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி இயக்குனர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
மத்திய, சப்ரகமுவ, தெற்கு, ஊவா, மேல், வடமேல் மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றருக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு மேலதிகமாக விசேடமாக மலையத்தில் மக்கள் மண்சரிவு தொடர்பில் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டியது கட்டாயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மண் சரிவு தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் புதிய நீரூற்றுக்களின் தோற்றம், மரங்கள் அசைவு, நிலத்தில் விரிசல் போன்றவைகள் தொடர்பிலும் மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





