பலரையும் பலியெடுத்த வைரஸ் காய்ச்சல் : நாடு முழுவதும் பரவும் அபாயம் : அவதானம்!!

587

தென்னிலங்கையில், பரவி வரும் இன்புளுவென்ஸா நோய் தொடர்பாக மக்களுக்கு முறையாக விளக்கமளித்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு இல்லாவிடின் நாடு முழுவதும் இந்த நோய் பரவி உயிர்ச் சேதங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்க கராப்பிட்டிய வைத்தியசாலைக் கிளையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் இந்நோய் பரவினால், தீவிர சிகிச்சைக்காக பயிற்சி பெற்ற வைத்தியர்களின் பற்றாக்குறை, உபகரணங்கள் போதாமை, சிறுவர்களுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் இடவசதியின்மை உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும்.

இந்நிலையில், நிபுணத்துவ வைத்தியர்கள் இன்மை போன்ற காரணங்களால் நிலைமை மேலும் மோசமடையலாமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஜனித் லியனகே தெரிவித்தார்.

காலி கராப்பிட்டி வைத்தியசாலையில் மட்டும் அதி தீவிர சிகிச்சை பிரிவில் ஏழு கட்டில்களே உள்ளன. மேல் மாடியில் மேலும் கட்டில்களைப் கொண்டு விரிவுபடுத்தலாம். இந்த விடயமாக அரசு கவனம் செலுத்த வேண்டும்.

இந்த அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்புளுவென்ஸாவினால் பீடிக்கப்பட்ட குழந்தைகள் நிரம்பி உள்ளனர். இதனால் புற்றுநோய், சிறுநீரக, இருதய நோயாளர்களை இப்பிரிவில் சேர்க்க முடியாதுள்ளது.

நான்கு சிறுவர் தீவிர சிகிச்சை பிரிவுகள் மட்டுமே இலங்கையில் உள்ளன. கராபிட்டியில் இப்பிரிவில் கடமையாற்ற இரு வைத்திய நிபுணரே உள்ளார். நாடு முழுவதும் பத்துப் பேரே உள்ளனர் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த வைரஸ் காய்ச்சல் காரணமாக பலர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.