இலங்கையில் 37 வருடங்களுக்குப் பின் உருவாக்கப்பட்ட இலச்சினை : சாதனை படைத்த மாணவி!!

546

நிர்வாக செயற்பாடுகளுக்கான நாடாளுமன்ற ஆணையாளர் (ஒம்புட்ஸ்மன்) அலுவலகத்திற்கு 37 வருடங்களுக்குப் பின் உத்தியோகபூர்வ இலச்சினை உருவாக்கிய பெறுமையை மாணவி ஒருவர் பெற்றுக்கொண்டுள்ளார்.

1981 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை ஒம்புட்ஸ்மன் அலுவலகம் கடந்த 37 வருடங்களாக சேவையாற்றி வருகின்ற போதும், அந்த அலுவலகத்திற்கு உத்தியோகபூர்வ இலச்சினையும் இணையத்தளமும் இதுவரை இருக்கவில்லை.

இந்த குறையை நிவர்த்தி செய்வதற்கு, நாடளாவிய ரீதியில் பாடசாலை ஓவியப் போட்டியொன்றினை நடத்தி அதன்மூலம் இலட்சினையை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்படி 2016 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் பாடசாலை ஓவியப் போட்டியொன்று நடத்தப்பட்டது, இதில் நாடெங்கிலும் உள்ள பாடசாலைகளை சார்ந்த 10, 11ஆம் தரங்களை சேர்ந்த மாணவர்களால் 116 ஓவியங்கள் தபால் மூலமாக அனுப்பப்பட்டது.

இதில் கல்வி அமைச்சின் சித்திரப் பிரிவின் பிரபல நடுவர் சபையினால் ஆராய்ந்து, 2016ஆம் ஆண்டில் 10ஆம் தரத்தில் கல்வி கற்ற காயத்ரி பபோத பெரேரா என்ற மாணவியினால் சமர்ப்பிக்கப்பட்ட ஓவியம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து, 37 வருடங்களுக்குப் பின் ஒம்புட்ஸ்மன் அலுவலகத்திற்கு புதிய உத்தியோகபூர்வ இலச்சினையும் இணையத்தள அங்குரார்ப்பணமும் ஜனாதிபதியால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஓவியப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவ மாணவியர்களுக்கான சான்றிதழ்களும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன.