வவுனியாவில் நீதிமன்றத்திற்கு அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!

788

வவுனியா நகரசபைத் தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (01.06.2018) காலை 10.30 மணியளவில் வவுனியா நகரசபை மைதானத்திற்கு முன்பாக (நீதிமன்றத்திற்கு அருகே) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கடந்த வாரம் நகரசபை தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்டோர் சிறைச்சாலைக்கு அருகிலுள்ள நீதிமன்றத்தின் வாகனத்தரிப்பிடத்திற்கு என ஒதுக்கப்பட்ட வெற்றுக்காணியைப் பார்வையிடச் சென்ற சமயத்தில் அங்கு கடமையிலிருந்த சிறைக்காவலர் ஒருவரினால் நகரசபை தலைவருக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து குறித்த சிறைக்காவலருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதிலும் அது நடைபெறவில்லை

இதையடுத்து இன்று (01.06) காலை வவுனியா நகரசபை மைதானத்திற்கு முன்பாக ஒன்றிணைந்தவர்களினால் நகரசபை தலைவர், செயலாளரை அவமதித்த சிறைக்காவலர் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராஜா, இ.இந்திரராசா வவுனியா நகரசபை உப தலைவர், வவுனியா செட்டிகுளம் பிரதேசபை தலைவர், உறுப்பினர்கள்,

தமிழ் தெற்கு பிரதேசபை தலைவர், உறுப்பினர்கள், வவுனியா வடக்கு நெடுக்கேணி பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ். சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், வர்த்தகர் சங்கப்பிரதிநிதிகள், முச்சக்கரவண்டிசாரதிகள் என பலரும் கலந்து கொண்டதுடன் வவுனியா நகரசபை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எவரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறைக்காவலர் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதுடன் அவர் நகரசபை தலைவர், செயலாளரிடம் மன்னிப்புக்கோர வேண்டும் என்றும் கோசமிட்டனர்.