சிறுமியை தடுத்து வைத்து அச்சுறுத்திய 15 வயது சிறுவனொருவர் உட்பட மூவருக்கு நேர்ந்த கதி!!

532

திருகோணமலை – சாம்பல்தீவு பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியை தடுத்து வைத்து அச்சுறுத்திய 20 மற்றும் 23 வயதுடைய இருவரையும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு 15 வயது சிறுவனை ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்லுமாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான வழக்கு இன்று திருகோணமலை நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாம் தரத்தில் கல்வி பயிலும் குறித்த மாணவி பிரத்தியேக வகுப்பிற்கு சென்று வரும் போது பச்சை நிற முச்சக்கர வண்டியில் வந்த மூவர் தடுத்து வைத்து அச்சுறுத்தியதாக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபர்கள் மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சாம்பல்தீவு, ஆத்திமேடு பகுதியை சேர்ந்த ஜெ.ஜெராட் (20 வயது) மற்றும் அதே இடத்தை சேர்ந்த கோவிந்தா ஜதூர் (23 வயது) ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், நாகராஜா ஜெயராஜா (15 வயது) எனும் சிறுவன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.