வவுனியாவில் குழந்தை கடத்தல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது : குழந்தை மீட்பு!!

1278

வவுனியாவில் கடந்த 31.05.2018 கடத்தப்பட்ட வானிசன் என்ற 8 மாத குழந்தை புதுக்குடியிருப்பில் மீட்கப்பட்ட நிலையில் இன்று 02.06.2018 இரவு 8.30 மணிக்கு தாயும் சேயும் வவுனியாவிற்கு பொலிசாரால் அழைத்து வரப்பட்டனர்.

குழந்தையும் தாயையும் பார்வையிட்ட வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ரி.எம்.எஸ்.எம் தென்னக்கோன் அவர்களுடன் அளவளாவியதுடன், அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு பணித்திருந்தார்.

குழந்தையுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் பொலிசாரின் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டிருந்த நிலையில் இரு பெண்களையும் குற்றத்தடுப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்ட சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

கடத்தல் சம்பவம் இடம்பெற்றதையடுத்து வன்னி பிரதிபொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக சகல பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டு வாகன சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில் இன்று குழந்தையையும் சந்தேக நபர்களையும் மீட்டுள்ளோம்.

அத்துடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குழந்ததையின் தாயார் எனது குழந்தை துரிதமாக மீட்கப்பட்டமைக்கு வவுனியா பொலிசார்தான் காரணம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். என்னை பழிவாங்கும் நோக்குடனே எனது குழந்தையை எனது கணவர் கடத்தினார் என தெரிவித்தார்.