வவுனியா நகரபிதாவினை அவமரியாதை செய்த சிறைக்காவலர் இன்று (04.06) வவுனியா பொலிஸ் நிலையத்தில் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி முன்னிலையில் மன்னிப்பு கோரியிருந்ததாக வவுனியா நகரபிதா இ.கெளதமன் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
மே மாதம் 18ம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் அழைப்பின் பேரில் வவுனியா நகரசபைக்கும் நீதிமன்றத்திற்கும் இடையில் அமைந்துள்ள ஒரு காணியொன்றினையும் பல காலம் மூடப்பட்டு இருக்கும் பாதையொன்றினையும் பார்வையிடுவதற்காக சென்றிருந்தோம்.
இதன் போது சிறைக்காவலர்கள் தங்களுக்கு நீர்ப்பிரச்சினை என்பது பெரியதொரு பிரச்சினையாக இருப்பதாக கூறியிருந்தனர். இதற்கு நீண்டகாலமாக மூடப்பட்டுள்ள பாதையினை திறந்துவிடுவதன் மூலம் இதற்கான தீர்வினை எடுக்க முடியும் என்று அவர்களிற்கு வாக்குறுதியளித்திருந்தேன்.
கடந்த 28ம் திகதி மீண்டும் நகரசபை சாரதி, செயலாளர் உடன் சென்று பார்வையிட்டுவிட்டு திரும்பும் போது ஒரு சிறைக்காவலாளி என்னை தரக்குறைவாக பேசியதுடன் நான் நகரபிதா என தெரிவித்த போதும் அதனை உதாசினப்படுத்தியதுடன் அவமானப்படுத்தியிருந்தார்.
இது தொடர்பாக பொலிசில் முறைப்பாடு செய்திருந்தேன். மேலும் சிறைக்காவலரின் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்து பாரளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தலைவர் வவுனியா நகரசபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள் வர்த்தகர் சங்கம் என்பவற்றால் கண்டன ஆர்ப்பாட்டங்கள் செய்யப்பட்டிருந்தன.
இந் நிலையில் நீண்ட நாட்களின் பின்னர் சிறைக்காவலர்கள் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் முன்னாள் என்னிடம் மன்னிப்பு கோரியிருந்தனர். இதனை நான் மனிதாபிமான ரீதியில் மன்னிப்பளித்திருந்தேன்.
குறிப்பாக இரண்டு கிழமைகளுக்கு முன்பு கூட சிறைக்காவலர்களின் நடத்தைகள் மற்றும் கைதிகளை நடாத்தும் விதங்கள் தொடர்பாக வவுனியா சட்டத்தரணிகளால் ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வவுனியாவின் நகர பிதாவான என்னிடமே இவ்வாறு நடந்துகொள்ளும் இவர்கள் சிறைக்கைதிகளிடமோ அல்லது வேறு யாருடனோ எவ்வாறு நடந்து கொள்வர் என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருக்கின்றது என தெரிவித்தார்.





