படிக்க வேண்டும் உள்ளே விடுங்க : 6 வயது மாணவனின் கல்விக்கான போராட்டம்!!

523

திருப்பூரில் கட்டாய இலவச கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

திருப்பூரை அடுத்த அங்கீரிபாளையத்தி சேர்ந்த பழனிகுமார் தனது மகன் காந்திஜியை ஏழை மாணவர்களுக்கென தனியார் பள்ளியில் அரசு ஒதுக்கியுள்ள இலவச கல்வி சட்டத்தின் கீழ் சேர்த்திருக்கிறார்.

வழக்கம்போல கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தொடங்கியதும் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து படிக்க காந்திஜி ஆசையாக பள்ளிக்குள் வந்திருக்கிறான்.

கடந்த ஒன்றாம் தேதி பள்ளி தொடங்கியது முதல் காந்திஜியிடம் 20000 பணம் கேட்டு வாங்கி வர சொல்லி பள்ளி நிர்வாகம் கூறி வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவன் காந்திஜியை நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை.

மாணவர் நடந்த விவரங்களை தந்தையிடம் கூறிய பின் தந்தை பள்ளிக்கு வந்து நியாயம் கேட்டிருக்கிறார். கட்டாய இலவச கல்வியின் கீழ் படிப்பதால் கட்டணம் கட்ட வேண்டியதில்லை என்கிற காரணத்தையும் கூறியிருக்கிறார்.

மாணவரை உள்ளே சேர்க்காத பள்ளி நிர்வாகம் நியாயம் கேட்டு வந்த பழனிகுமாரின் வண்டி சாவியையும் பிடுங்கி விட்டு வெளியே அனுப்பியிருக்கிறது.

செய்வதறியாமல் திகைத்த பழனிக்குமார் மகனுடன் பள்ளி வாசலில் நின்று நியாயம் கேட்டு போராடினர். அந்த வழியாக வந்தவர்களும் நியாயம் உணர்ந்து பழனிகுமாரோடு இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் ஒருபகுதியாக தனது சிலேட்டில் பள்ளிக்கு உள்ளே விடுங்க என்று எழுதிய ஒன்றாம் வகுப்பு மாணவர் காந்திஜி அதனைக் கையில் பிடித்தபடி நின்றிருந்தது அனைவரையும் நெகிழ செய்தது.

இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி சாந்தியிடம் கேட்டபோது கல்விக்கட்டணம் மட்டும்தான் அரசு செலுத்தும் எனவும் தனியார் பள்ளியின் விதிமுறைகளின் படி பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும் என்றது பேரதிர்ச்சியாகத்தான் இருந்தது.