லண்டன் மாப்பிள்ளை : லட்சக்கணக்கில் சம்பளம் : பெண்ணை ஏமாற்ற திட்டம்போட்ட இளைஞர்!!

633

சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஹொட்டல் அதிபரின் மகளை திருமணம் செய்துகொள்வதற்காக லண்டன் மாப்பிள்ளை என பொய்கூறியுள்ளார்.

சென்னை சேர்ந்த அமுக்குடியான் அமானுல்லாவின் மகன் முகமது அஸ்லம் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த ஹொட்டல் அதிபர் சையது இப்ராகிமின் மகளை தனக்கு பெண் கேட்டுள்ளார்.

அஸ்லம் எம்பிஏ படித்துவிட்டு லண்டனில் மாதம் ஒரு லட்ச ரூபாய் ஊதியம் வாங்குவதாகவும் அவரும் அவரது பெற்றோரும் கூறியுள்ளனர். அதை நம்பி தனது மகளின் புகைப்படத்தை சையது இப்ராகிம் கொடுத்துள்ளார்.

ஆனாலும் சந்தேகத்தின் பேரில் விசாரித்தபோது முகமது அஸ்லம் 9ஆம் வகுப்பு வரையே படித்தது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இப்ராகிம் தனது மகளை மணம் முடித்துக் கொடுக்க மறுத்துள்ளார்.

இதனால் கோபமடைந்த முகமது அஸ்லம், தனக்கு நஷ்ட ஈடாக 50 லட்ச ரூபாய் வேண்டும் என்றும், தர மறுத்தால் பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து இப்ராகிம் அளித்த புகாரின் பேரில், முகமது அஸ்லமை கைது செய்த காவல்துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.