கிளிநொச்சியில் பத்து பேரை தாக்கிய புலி அடித்துக் கொலை!!

684

 

கிளிநொச்சி – அம்பாள்குளம் கிராமத்தில் இன்று காலை 7 மணி முதல் மதியம் 12.30 மணி வரை வன ஜீவராசி திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் உட்பட பத்து பேரை தாக்கிய சிறுத்தை புலியை பொது மக்கள் அடித்துக் கொலை செய்துள்ளனர்.

அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலயத்திற்கு பின்புறமாக மக்கள் குடியிருப்பு பகுதியில் ஆட்களற்ற காணியில் புகுந்த சிறுத்தையை பிடிக்க சென்ற இருவரை முதலில் தாக்கியுள்ளது.

இதனை தொடர்ந்து கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு பொது மக்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு புலியை பிடிப்பதற்கான ஆயத்தமின்றி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். இதனால் பொது மக்களுக்கும் அவர்களுக்குமிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.

இதன்பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து வனஜீவராசிகள் திணைக்கள மருத்துவர் வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் பதினொரு மணியளவில் வனஜீவராசிகள் திணைக்கள மருத்துவர் உட்பட சில அதிகாரிகள் வருகைதந்தனர். இதற்கு இடையில் எட்டு பேரை சிறுத்தை தாக்கியுள்ளது.

பின்னர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சுற்றி வளைத்த போது அத் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவரையும் சிறுத்தை தாக்கியுள்ளது.

இதன் பின்னர் கிராம பொது மக்கள் பொல்லுகளுடன், சென்று சுற்றி வளைத்து தேடிய போது பற்றைக்குள் இருந்து வெளியேறிய சிறுத்தை அங்கிருந்த ஒருவரை தாக்க முற்பட்டுள்ளது.

இதன்போது மக்கள் பொல்லுகளைக் கொண்டு தாக்கி சிறுத்தையை கொலை செய்துள்ளனர்.

இதேவேளை, தற்போது சிறுத்தை தாக்கிய அனைவரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மேலும், சம்பவ இடத்தில் கிளிநொச்சி பொலிஸார், கிராம அலுவலர் உட்பட பலர் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.