வவுனியாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!

573

வவுனியாவில் தேசிய இனமான இந்திய வம்சாவளி மக்களை இழிவுபடுத்தும் சக்திகளுக்கு எதிரான கண்டனப் பேரணி வடகிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்றது.

இன்று காலை 10.30 மணியளவில் சிந்தமாமணி பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக ஆரம்பமாகி கண்டி வீதி வழியாக மணிக்கூட்டுக்கோபுரம் பஜார் வீதி, இலுப்பையடிவழியாக மாவட்ட செயலகம் சென்று அங்கு உதவி மாவட்ட செயலாளரிடம் மகஜரைக் கையளித்து தமது நிலைமைகள் தொடர்பாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து கண்டன ஆர்ப்பாட்டம் வவுனியா பிரதேச செயலகத்தினைச் சென்றடைந்து அங்கு பிரதேச செயலாளர் கா.உதயராசாவிடம் மகஜர் ஒன்றினையும் வழங்கியிருந்தனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பார்த்தீபனே உனக்குப்பின்னால் எத்தனை பார்த்தீபன்கள்?, எல்லைப்புறக்கிராமங்களின் பாதுகாவலர் நாமே, காணி உமது உரிமை இதனைப் பறிக்கத்திட்டமிடாதே, உங்கள் சொந்த நலனுக்காக தமிழ்த்தேசியத்தை கூறுபோடாதே, எமது சமூகத்தை இழிவுபடுத்தாதே, காடுகளை அழித்து சேனைகள் ஆக்கியது யார்?? போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நூற்றுக்குமேற்பட்டவர்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் வவனியா பிரதேச செயலகத்தில் தமது இனத்ததை இழிவுபடுத்திய நபரைக் கைது செய்யக்கோரி போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து பொலிசார் அங்கு வந்திருந்த குறித்த இனத்தை இழிவுபடுத்திய சந்தேக நபரைக் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பிரதேச செயலகத்தின் செயற்பாடுகள் சற்று நேரம் தடைப்பட்டிருந்தது.